Blog
அமெரிக்க-ஈரான் போருக்கு நடுவில் இலங்கை சிக்குமா???
ஈரான் மீது தாக்குதலைத் தொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுவரும் நிலையில், அமெரிக்க பசுபிக் பிராந்திய தளபதி எட்மிரால் ஸ்டீவ் கொஹுலர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட 03 நாள் விஜயம் பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக அறியமுடிகிறது.
இலங்கையிலிருந்து ஆயிரம் கடல் மைல் தொலைவில் இருக்கும் டியாகோ கார்சியா தீவிலுள்ள ஐக்கிய அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சிய இராணுவத் தளத்திலிருந்து ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் சாத்தியம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏனெனில், பூகோள ரீதியாக இலங்கை, டியாகோ கார்சியா தீவுக்கும் ஈரானுக்குமிடையில் அமைந்துள்ளது. அத்துடன், திறந்த அமைதியான சிறப்பான இந்தோ பசுபிக் நிலைமை அமெரிக்க மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிடையே நீண்டகாலமாகப் பேணப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க தளபதியின் இலங்கை விஜயத்தின் போது அவர் இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகரவை சந்தித்தார். இதன்போது பலதரப்பட்ட பாதுகாப்பு சவால்கள் உட்பட பற்பல முக்கிய விடயங்கள் பகிரப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தளபதியின் இலங்கைக்கான இரண்டாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரிட்டனுக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவை மொரீசியஸ் நாட்டிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.
ஈரான் மீது அமெரிக்கா திடீர் தாக்குதலை தொடுக்குமாயின் அதன் தளபாடப் போக்குவரத்து செயற்பாடுகளுக்கு தேவைப்படின் இடைத்தளமாக இலங்கையைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக அறியமுடிகிறது.
எவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த யோசனை இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.

