Local, News

பொது சேவையில் நேர்மையின் அடையாளம் பேராசிரியர் திஸ்ஸ விதாரண; பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இரங்கல்….

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இரங்கல்.

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்கள் காலமான செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவரது இழப்பு இலங்கை அரசியல், அறிவியல் மற்றும் பொதுசேவை துறைகளுக்கு ஈடுசெய்ய முடியாதது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும் அச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

அமரர் திஸ்ஸ விதாரண, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக அவர்கள் பணியாற்றிய காலத்தில், அந்த அமைச்சின் பிரதி அமைச்சராகவும், அவர் பாராளுமன்ற கணக்குக் குழுவின் தவிசாளராக அவர் இருந்தபோது அதன் உறுப்பினராக இணைந்து பணியாற்றியுள்ளேன்.

அந்த காலப்பகுதிகளில் அவரது நேர்மை, அறிவாற்றல் மற்றும் பொது நலன் சார்ந்த அணுகுமுறை அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தது.

லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சரவை அமைச்சர் மற்றும் வட மத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்த பேராசிரியர் விதாரண, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளின் வளர்ச்சிக்காக அளித்த பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும்.

அதேபோன்று, 2017ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட “வித்யா ஜோதி” பட்டம், அவரது அறிவியல் சேவைகளுக்கான தேசியஅங்கீகாரமாக காணப்படுகிறது.

மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் கட்சி தோழர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


— ஊடகப்பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *